பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்

யோக சித்தி

வரங்கேட்டல்
Bharathiyar Kavithaigal

தேடிச் சோறுநிதந் தின்று -- பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
  கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
   வீழ்வே னன்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
  நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
  மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
  கேதுங் கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

தோளை வலியுடைய தாக்கி -- உடற்
  சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு
  மாறா வுடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
  நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
  மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
  யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
  பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
  நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
  பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
  கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்
  போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என
  விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்
  சூழும் வீரமறி வாண்மை

கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
  கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
  நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
  தாயே உனக்கரிய துண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை
  முற்றும் விட்டகல வேண்டும்;


ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
  அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
  பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
  உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
  வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
  ஓங்காரத் தலைவி என்இராணி.

குறிப்பு: இப்பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின் மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.

Post a Comment

0 Comments